Friday, March 27, 2009

இத்தனை அழகு எங்கே?!!

நண்பர்களே! நேற்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது... அதில் மிக மிக அழகான மலைகள், நிலப்பரப்புகள், ஆறுகள் இவயெல்லாம் இருந்தன...

நானும் எதோ இது ஐரோப்பா நாடுகளில் தேடிப்பிடித்து எடுக்கப்பட்ட படங்கள் என நினைத்தேன்!



ஆனால், இவை இன்று ஒபாமாவால், ஒசாமா ஒளிந்திருக்கிறார் என்று கருதப்படும் பாகிஸ்தானில் உள்ள மலைகள் (ஒரு வேளை இதில் எதோ ஒரு இடத்தில் தான் ஒழிந்து கொண்டிருப்பானோ?! - கொடுத்துவைத்த மகாராசன்!!!).

   

Thursday, March 19, 2009

இந்தியாவில் பணவீக்கம் என்பது ஒரு போலிச் சொல்! ஏன்?


இந்த மார்ச் 7 ம் தேதியோடு முடிவடைந்த வாரத்திற்கான பண வீக்கத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது அனைவருக்கும் தெரியும், ஆம் 0.44 சதம் தான்!! கடந்த வாரம் 2.42 ஆக இருந்த பணவீக்கம் இந்த வாரம் 0.44 ஆக குறைந்தது, இது விலை குறைந்ததை உணர்த்தவில்லை மாறாக விலை ஏற்றம் மடுப்படுத்தப்பட்டத்தையே காட்டுகிறது! அதே நேரம் இந்த 0.44 என்பது மொத்த விலை குறியீடு, சமீபத்திய நுகர்வோர் வாங்கும் விலை குறியீடு எவ்வளவு தெரியுமா, 10.45 சதம்!!

இந்திய அரசு எவ்வாறு தன்னுடைய பணவீக்கத்தை கணிக்கிறது என்பதை பார்த்தபின் அதனால் எவ்வாறெல்லாம் என்னையும் உங்களையும் போல ஒரு சராசரி குடிமகன் பாதிக்க படுகிறான் என்பதை பார்ப்போம்.

நமது பணவீக்கம் மொத்த விற்ப்பனை குறியீடு (Wholesale Price Index 'WPI') எனப்படும் முறையில் கணக்கிடப்படுகிறது. இது 1902 ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பொருளாதார மாற்றங்களை கணக்கிட கடைபிடித்த முறை. அதன் பின்னர் வளர்ந்த நாடுகளில் 1970 முதல் 'நுகர்வோர் வாங்கும் விலை குறியீடு' (Consumer Price Index 'CPI') என்ற முறையை அறிமுகப்படுத்தி கடைப்பிடித்து வந்தனர். இந்த முறைகளில் என்ன வேறுபாடு என்று அறிவது முக்கியம்.

மொத்த விற்ப்பனை குறியீடு

நமது நாட்டில் இருப்பதை போல் மொத்த விற்ப்பனை குறியீடு மூலமாக 435 அடிப்படை பொருட்களின் (உதாரணமாக ஒரு டன் இரும்பின் விலை, ஒரு டன் சிமென்டின் விலை, பருத்தி, பஞ்சு, புகையிலை, என்பன...) விலையை கண்காணித்து அதன் விலை ஏற்றங்களை பிரதி வாரமும் கணக்கெடுத்து பணவீக்கத்தை உணர முடியும். ஆனால் 435 ல் 100 வகைகளுக்கும் அதிகமான பொருட்கள் நுகர்வோருக்கு சிறிதும் தேவை இல்லாத பொருட்கள் ஆகும். மேலும் இந்த முறையில் மொத்த வணிகத்தில் ஏற்படும் தாக்கத்தை மட்டுமே உணர முடியும் ஆனால் இங்கு அதை பொது மக்களின் மீது ஏற்படும் தாக்கத்தை கணிக்க பயன்படுத்துகின்றனர்! மேலே குறிப்பிட்ட 435 பொருட்களின் பட்டியலும் 1993-1994 ம் வருடம் நிர்ணயிக்க பட்டது. அதன் பின்னர் எந்த மாற்றமும் இன்றி வைக்கப்பட்டுள்ளது. (அதே வேளை CPI முறையில் ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் விரும்பி வாங்கும் பொருட்களை பரிசீலித்து அவற்றை பட்டியலிட்டு கண்காணிக்கின்றனர் அயல் நாடுகளில்!) 'WPI' முறையில் கணக்கிட்டால் தவறான குறியீடாகவே அமையும் என்று பல பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிட்டு வருவது கவனிக்கப்பட வேண்டியது அவசியம். இது தொழிலதிபர்களுக்கு சாதகமான முறையே தவிர சராசரி பொதுமக்களின் சுமையை ஒருபோதும் கணிக்காது. உலகில் உள்ள பெரிய நாடுகளில் 'WPI' முறையை கடைபிடிப்பது இந்தியா மட்டுமே என்பது குறிப்பிட தக்கது.

நுகர்வோர் வாங்கும் விலை குறியீடு

அதே சமயம், 'நுகர்வோர் வாங்கும் விலை குறியீடு' மூலம் நுகர்வோர் வாங்கும் முனையில் உள்ள 100 முக்கிய பொருட்களின் விலையை கண்காணித்து அதன் மூலம் பணவீக்கம் கணக்கிட படுகிறது! இப்போது உங்களுக்கே நன்றாக புரியும், 'CPI' மூலம் கணக்கிடுவது நுகர்வோர் ஒரு பொருளை வாங்குவதற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டி உள்ளது என்பதை மிக துல்லியமாக கணிக்க முடியும். அமெரிக்கா தொடங்கி இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், சீனா, சிங்கபூர், உள்ளிட்ட நாடுகள் இந்த முறையிலேயே தங்கள் நாட்டு மக்களின் பொருளாதார வாழ்க்கை தரத்தை (Cost of Living) கணிக்கின்றனர்.

நமது அரசு மிகப்பெரிய / மொத்த வியாபாரிகளின் அருகில் இருந்து கவனிக்கும் பொருளாதார ஏற்ற தாழ்வுகளினால் நம்மை போன்ற சாதாரண குடிமகன் முகம்கொடுக்கின்ற / எதிர்நோக்குகின்ற பொருளாதார சவால்களை உணர முடியாது என்பது தெளிவாகிறது!

யார் காரணம்?

இனி பணவீக்கம் என்ற காரணியால் நாம் அனைவரும் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம் என்பதை பார்க்கலாம். மேலே குறிப்பிட்டதை போல கடந்த ஆகஸ்ட் மாதம் 'கச்சா எண்ணெய்' (Crude Oil) விலைஅதிகரித்ததால் பணவீக்கம் அதிகரித்தது என்ற செய்தி வெளியானவுடன், பெட்ரோல், டீசல், மட்டுமல்லாமல், சகல பொருள் அங்காடி (Super Market) முதல் பெட்டி கடைகள் வரை அனைத்து கொள்முதல் வழிகளிலும் விலை ஏற்றத்தினை கண்டோம். அரிசி முதல், சீம்பூ (கலைச்சொல் 'Shampoo'), பல் பொடி வரை அனைத்து பொருட்கள் விலையும் ஒரு சில நாட்களிலேயே உயர்த்தப்பட்டது!! என்ன காரணம்??! இதன் விளைவாக உணவு விடுதிகள் அனைத்திலும் விலை ஏற்றம், சரி நியாயம்தான்(!).

அதன் பின்னர் படிப்படியாக கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கியது, பணவீக்கமும் (செய்திகள் முலமாக தெரிந்து கொண்ட 12, 10, 4, 2.42, 0.44 என) குறைய தொடங்கியது... இறுதியில் பல இழுபறிகளுக்கு பிறகு அரசு பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைத்தது. இன்று, அரசு பணவீக்கத்தை கட்டுப்படுதிவிட்டது, எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது, சாதனை நிகழ்திவிட்டது என்றெல்லாம் தினமும் பத்திரிக்கைகளில் காண்கிறோம். எல்லாம் சரி, நுகர்வோர் வாங்கும் பொருட்களின் விலை சந்தையில் குறைந்ததா?? இல்லை. யாரை கேட்பது?! இன்று நம் அரசியல் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு இது தெரியுமா தெரியாதா??

ஏன் இதை மாற்ற முயற்சிக்க வில்லை? ஏனென்றால், அவர்களுக்கு பெரிய முதலாளிகளின் ஆதரவு (பொருள் ஆதரவு!) வேண்டும். அரசு இந்த 'WPI' முறையை கடைபிடிப்பதால் தங்களுக்கு நன்மை என்று பெரும் முதலாளிகளுக்கு தெரியும்! அதனால் தான் பணவீக்கம் ஏறும் போது தங்களின் அனைத்து பொருட்களின் விலையையும் ஏற்றவும் பின் பணவீக்கம் பாதாளத்தில் இறங்கினாலும் விலையை ஒரு படி கூட குறைக்காமலும் இருக்க முடிகிறது! ஆனால் உங்களையும் என்னையும் போல இருக்கும் சராசரி குடிமகனுக்கு இருப்பதெல்லாம் விலை எப்போது குறையும் என்ற வெறும் எதிர்பார்ப்பு மட்டுமே!

இந்த போலி பணவீக்கம் என்ற எண்களை காட்டி ஏமாற்றும் அரசியல் வாதிகளுக்கு நம்மால் பாடம் புகட்ட முடியுமா??

உங்கள் கருத்துக்களை பதிலாய் இட்டால் பயனுள்ளதாக இருக்கும்...

   

Friday, March 13, 2009

அனைத்து நிர்வாகிகளும் தெரிந்து கொள்ள வேண்டியது


எனக்கு நேற்று ஒரு மிண்னஞ்சல் வந்தது. நானும் வழக்கம் போல் மக்கள் இன்னொரு மொக்கை மெயில் அனுப்பயுள்ளனரென்று திறந்து பாத்தால், ஒரு ஆச்சர்யமான பவர் பாயின்ட் தொகுப்பு இருந்தது...

ஒரு சிறு எறும்பின் அலுவலக கதை. இந்த கதை, நிர்வாகத்தினருக்கு ஒரு நல்ல அறிவுரையாகவும், அலுவலகங்களில் நன்கு பணியாற்றியும் தாங்கள் கவனிக்கப்படாமல் விடப்பட்டதாக உணரும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஆறுதலாக இருக்கும் என நினைக்கிறன். ஆகவே இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

The Ant
View more presentations from tamilarnesan.

   

Thursday, March 5, 2009

ஜெயலலிதாவின் திடீர் பல்ட்டி.

வடிவேல், 'வின்னர்' என்ற திரைப்படத்தில், அருமையாக ஒரு நகைச்சுவை செய்திருப்பார். அதில், "இதுவரை என்னை யாருமே தொட்டதில்லை என்பார்" கட்டத்துறை கேட்பார் "ஏன்டா போன மாசம் தானே உன்ன அடிச்சேன்?!" அதற்க்கு கைப்புளை வடிவேலு, "அது போன மாசம் இது இந்த மாசம்..." என்பார்.

நமது நடிகை அம்மா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கும் போது முதலில் என் நினைவுக்கு வந்தது இந்த காமெடி தான்..

அம்மா காமெடி பாக்கறதுக்கு முன்னாடி, மறுபடியும் ஒரு முறை நம்ம வின்னர் காமெடி பார்க்க நெனச்சா கீழ உள்ள படத்த சொடுக்குங்க..



என்ன செய்தின்னு கேளுங்களேன்..
"இலங்கை தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம், உண்டியல் மூலம் நிதி திரட்ட வேண்டுகோள்!!!!"

போன மாசம்...

ஒரு மாதத்திற்கு முன் ஜெ வின் நிலைப்பாடு,
ஈழ தமிழர் என்று சொல்ல மாட்டார், ஏனென்றால் ஈழம் என்ற ஒரு நாடே இல்லையாம்!
இராணுவம் நடத்தும் தாக்குதலில் அப்பாவிகள் உயிர் இழப்பது அவருக்கு சாதாரணம்!
இலங்கை தமிழர் பிரட்ச்சனையில் மத்திய அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு மிகவும் சரியாம். இவர் அதை முழுமையாக ஆதரிக்கிறாராம்!
இவையெல்லாம் கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் வாயால் சொல்லி செய்தியாக வந்தவை..

இந்த மாசம்..
ஆனால் இன்று, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ..
"இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதல் காரணமாக இலங்கையில் வாழும் நமது உடன்பிறப்புகளாகிய தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும், உண்ண உணவு இன்றியும், உரிய மருத்துவ சிகிச்சை இன்றியும், பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆட்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தடுத்து நிறுத்துவதற்குரிய ஒரே வழி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

தமிழினத் தலைவர் என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், அவர் தாங்கி நிற்கும் மத்திய அரசும் இனப் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக் கின்றன.இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் வருகின்ற 10.3.2009 செவ்வாய் கிழமை அன்று அதிமுக சென்னை மாநகரிலும், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

என்ன நல்ல சிரிச்சீங்களா?? ஆமாங்க பெரியம்மா போட்ட மாஸ்டர் ப்ளான் இந்த காமெடி மாதரி ஆக போகுது!!!

   

Tuesday, March 3, 2009

என் அன்பான உலக மக்களே, வாழ்க உங்கள் மனிதாபிமானம்




இலங்கை கிரிகெட் வீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியது கண்டிக்க தக்க விடயம் தான்! கிரிக்கெட் வீரர்கள் விளையாட போன இடத்தில் உயிருக்கு ஆபத்து என்ற உடன் இங்கு பலர் தங்கள் ஆதங்கத்தையும் அனுதாபத்தையும் கொட்டி உள்ளனர், உலகமே திரும்பி பார்த்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறது, போகல்ல விரைகிறார்...

ஆனால், அதே இலங்கையில் என் இனம், தினம் தினம் செத்து மடிகிறதே, பிஞ்சுக்குழந்தைகள், தம் கை கால் களை இழக்கிறதே, உண்ண உணவின்றி, பட்ட காயத்துக்கு மருந்து இன்றி ஒரு நாளைக்கு பல பத்துபேர் அநியாயமாக உயிரை விடுகின்றனரே?? இது இந்த சமூகத்தை கவலை கொள்ள வைத்ததாக தெரியவில்லையே?? இன்று கூச்சளிடுகிற உலகம், அப்பாவிகள் கொள்ளப்படுகிற போது தன் வாயை மூடிக்கொண்டு இருக்கிறதே??


என் அன்பான உலகமே உன்னை ஒன்று கேட்கிறேன், இப்போது தெரிகிறதா தீவிரவாதி எங்கு இருக்கிறான் என்று??!
கிரிகெட் காரன் உயிர் என்றால் சந்தணத்திலும் ஒரு சாமானிய தமிழன் உயிர் என்றான் சாக்கடையிலுமா செய்யப்பட்டிருக்கிறது??
ஒரு தீவிர வாதி சுட்டால் எப்படி வலிகிறதோ அப்படித் தானே ஒரு அரசாங்கள் சுடும் போதும் வலிக்கும்??
இன்று ஏதோ ராக்கட் தாக்குதல் நடத்தி, பிழைத்துக் கொண்டார்களாமே, தீவிரவாதியின் ராக்கட் குண்டு தான் கொள்ளுமோ? அரசாங்க விமானம் போடும் குண்டு, மயில் இரகினால் தடவிக் கொடுக்குமோ??

மூன்று பேருக்கு காயம் என்ற உடன் உலக ஊடகங்கள் வாரி கட்டிகொண்டு வந்து அங்கு கீறல் இங்கு வீரல் என்று செய்திக்காக நாக்கை தொங்கப் போட்டுகொண்டு அலைகிறதே, இலங்கை அரசின் இந்தப் போரின் காரணமாக இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி பொது மக்கள் கொள்ளப் பட்டது குறித்து எவனும் எந்த உண்மையையும் சொல்ல வில்லையே (அடக்கு முறைகளையும் மீறி உண்மை உரைக்கும் ஊடகங்கள் இருக்கின்றன அவற்றை நான் மதிக்கிறேன்) ??!
ஒரு கிரிகெட் வீரன் தாக்கப் படும் போது நீ உணரும் வலியும் வேதனையும் ஒரு பிஞ்சுக் குழந்தை கொல்லப் படும்போது காட்டாதது ஏன்??


வாழ்க உங்கள் மனிதாபிமானம்...

   

Monday, March 2, 2009

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அனைத்து துரோகங்களும் ஆதாரத்துடன் - வைகோ


ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் அனைத்து துரோகத்துக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கூட்டுப்பங்காளியாக உள்ளார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

பாளையங்கோட்டைச் சிறைச்சாலை நேர்காணலின்போது 02.03.2009 காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, கட்சியின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் சொல்லச் சொல்ல எழுதி வெளியிடப்பட்ட வைகோ அறிக்கை:

இரண்டாம் உலகப் போரின் போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக்கிறான். இந்த தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு முழுக்க, முழுக்க ஆயுத உதவி செய்தது இந்திய அரசுதான்.

1998 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், டெல்லியில் தான் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழின கொலை நடத்தும் சிங்கள அரசுக்கு இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங்களை கொடுக்காது என்றும், ஆயுதங்களை சிறிலங்காவுக்கு விற்பனை செய்வதில்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார்.

2004 ஆம் ஆண்டுவரை இந்திய அரசு அதனைக் கடைப்பிடித்தது.

சோனியா காந்தியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மத்தியில் மன்மோகன் சிங் அவர்களை பிரதமராகக் கொண்டு அரசு அமைத்த பின், வாஜ்பாய் அரசு எடுத்த முடிவை காற்றில் பறக்கவிட்டு சிறிலங்கா அரசோடு, இந்திய-சிறிலங்கா கூட்டு இராணுவ ஒப்பந்தம் செய்ய முடிவு எடுத்தது.

2004 ஆம் ஆண்டு நவம்பரில் இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த நிலையில், அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றிருந்த சூழலில், பிரதமரையும், சோனியா காந்தியையும், சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், அதன் தேசியச் செயலாளர் ராஜா அவர்களையும் மூன்று முறை சந்தித்து எடுத்துக்கொண்ட கடும் முயற்சிகளின் விளைவாக, இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

ஆனால், ஒரு மாதம் கழித்து கொழும்பு சென்ற அன்றைய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் இராணுவ ஒப்பந்தம் செய்யப்படாவிடினும், ஒப்பந்தச் சரத்துகள் நிறைவேற்றப்படும் என்று 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 இல் கொழும்பில் அறிவித்தார்.

நான் மறுநாள் டெல்லிக்குச் சென்று பிரதமரிடம் என் எதிர்ப்பைத் தெரிவித்தபோது, நட்வர்சிங் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து என்று பிரதமர் கூறியது ஏமாற்று வேலை என்பதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன். தமிழர் பகுதிகளின் மீது குண்டு வீச்சு நடத்தும் வானூர்திகள் இயங்குவதற்கு, பலாலி வானூர்தி தளத்தை இந்திய அரசு பழுது பார்த்துக் கொடுக்க முதலில் உத்தேசிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் முடிவாகியிருந்ததனால், அப்படிச் செய்வது தமிழ் இனத்திற்கே செய்கின்ற துரோகம் என்று, அப்போது இராணுவ அமைச்சர் பொறுப்பில் இருந்த பிரணாப் முகர்ஜியிடமும், சோனியா காந்தியிடமும், மன்மோகன் சிங்கிடமும் விளக்கமாகச் சொல்லி, அத்திட்டத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தினேன்.

பலாலி வானூர்தி தளத்தில் இருந்து ஏவப்பட்ட வான் குண்டு வீச்சில்தான் 1995 ஆம் ஆண்டில் ஏராளமான தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்படுவதையும், குறிப்பாக, நவாலி புனித பீற்றர் தேவாலயத்தில் இருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 168 பேர் இக்குண்டு வீச்சால் படுகொலை செய்யப்பட்டதையும் எடுத்துச் சொன்னேன்.

ஆனால், அதைச் செய்யப் போவதில்லை என்று பிரணாப் முகர்ஜி உறுதி அளித்து ஏமாற்றிவிட்டு, இந்திய வான்படை நிபுணர்களை அனுப்பி வைத்து, இந்திய அரசின் செலவிலேயே பலாலி வானூர்தி தளத்தை பழுது பார்த்துக் கொடுத்தனர் என்ற உண்மையை சிறிலங்காவின் வான்படை துணைத் தளபதி டொமினிக் பெரேரா, 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள், பகிரங்கமாக அறிவித்தார்.

2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில், சிறிலங்கா வான் படைக்கு இந்திய அரசு கதுவீகளை கொடுக்கப் போகிறது என்ற செய்தியை அறிந்து, டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து, கதுவீகளை கொடுக்காதீர்கள் என்று மன்றாடினேன்.

முதல் தடவை நான் சந்தித்தபோது, கொடுக்க மாட்டேன் என்று பிரதமர் சொன்னார். ஆனால், கதுவீகளை கொடுத்து விட்டார்கள் என்று அறிவித்தவுடன் இரண்டாவது தடவை நான் சந்தித்தபோது, இந்திய அரசு கொடுக்காவிட்டால் பாகிஸ்தான், சீனா கொடுக்கும் என்பதால் நாங்கள் கொடுத்தோம் என்றார். அந்தச் சொத்தை வாதத்தை எதிர்த்து நான் வாதாடினேன். அங்கே பாகிஸ்தான், சீனா வம்சாவழியினரோ அவர்களின் தொப்புள் கொடி உறவுகளோ இல்லை என்பதையும் இந்தியா தந்த கதுவீகளின் உதவியால் சிங்கள வான்படை நடத்தும் குண்டுவீச்சால் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள் என்று வாதிட்டேன். அதற்கு பிரதமர் அப்படி போர் மூளும் பட்சத்தில் இந்தியா கொடுத்த கதுவீகளை திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்று என்னிடம் கூறியதை, அப்போதே ஏடுகளில் செய்தியாக வெளியிட்டேன்.

இந்திய கதுவீகளின் உதவியோடுதான், சிங்கள வான்படை, தமிழர் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அப்படிப்பட்ட குண்டு வீச்சில் தான், செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறுமிகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர்.

இந்திய அரசு இதற்கு எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 8 ஆம் நாள் இரவு, விடுதலைப் புலிகளின் வான்படை வான் தாக்குதல் சிங்கள இராணுவ முகாம்மீது நடத்தப்பட்டபோது, இந்திய கதுவீகளை இயக்கிய இந்தியர்களான ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரமட் எனும் இரண்டுபேர் படுகாயமுற்ற செய்தி வந்தவுடன், இந்தியப் பிரதமருக்கு இந்தியாவின் துரோகத்தைக் கண்டித்து, மறுநாள் செப்ரெம்பர் மாதம் 9 ஆம் நாள் கடிதம் எழுதினேன்.

அதற்கு 2008 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 2 ஆம் நாள் பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா இராணுவ உதவி செய்துள்ளது என்று ஒப்புக்கொண்டு, கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையில் இந்திய - சிறிலங்கா கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் 2007 ஆம் ஆண்டிலேயே செய்யப்பட்டது. இந்திய கடற்படை இலங்கையில் நடைபெறும் போரில் விடுதலைப் புலிகளின் படகுகளையும் கப்பல்களையும் மூழ்கடிப்பதில் நேரடியாகவே ஈடுபட்டது.

இந்திய வான்படை நிபுணர்கள், சக்தி வாய்ந்த செய்மதி படப்பிடிப்பு கருவிகள் மூலம், புலிகளின் நடமாட்டத்தை சிங்கள வான்படைக்கு தெரிவித்ததன் விளைவாகவே புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.

2004 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசு சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் கொடுத்தும், வட்டியில்லாக் கடனாக 1,000 கோடி ரூபாய் கொடுத்தும் உதவியதன் மூலம் பாகிஸ்தான், சீனாவில் இருந்து ஏராளமான ஆயுதங்களை சிங்கள அரசு வாங்குவதற்கு வழிவகுத்துக் கொடுத்து, தமிழர்களுக்கு செய்த துரோகம் அனைத்தையும் நன்றாக அறிந்திருந்த கலைஞர் கருணாநிதி, இதற்கு எந்தக் கட்டத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆட்சேபணை சொல்லவில்லை.

இந்திய - சிங்கள அரசுகளின் கூட்டுச் சதிக்கு கலைஞர் கருணாநிதியும் ஒரு பொறுப்பாளி ஆவார்.

பின்னாளில் தன் மேல் வரும் பழியில் இருந்து தப்பிப்பதற்காக தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதினார். கடந்த சில மாதங்களாக சிங்கள அரசு - இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து வாங்கிக்குவித்துள்ள சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிடத் திட்டமிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தானாக முறித்தது; இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

இதில், தமிழ்மக்கள் லட்சக்கணக்கில் சொல்லப்படுவதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் தமிழ் இனத்தையே அங்கே கருவறுத்துவிட்டு, மிஞ்சுகிற தமிழர்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ளத் திட்டமிட்டவாறு புலிகளை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் திட்டமும் ஆகும்.

அதனால்தான் தமிழ்நாடு சட்டமன்றம் போர் நிறுத்தம் வேண்டும் என ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டு இன்று கலைஞர் கருணாநிதியால் தூயவர் என்று புகழப்படும் பிரணாப் முகர்ஜி, சென்னையில் முதலமைச்சரின் வீட்டு வாசலில் நின்று, போர் நிறுத்தம் கேட்பது எங்கள் வேலை அல்ல என்று திமிராகச் சொன்னார்.

கொழும்புக்குச் சென்ற பிரணாப் முகர்ஜி, போர் நிறுத்தம் கேட்கவேயில்லை என்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டான். 48 மணி நேரம் நாங்கள் தமிழர்கள் முல்லைத்தீவில் இருந்து வெளியேறக் கெடு விதித்தோமே தவிர, அது போர் நிறுத்தமல்ல என்றும், இந்திய அரசு சொன்னது உண்மை அல்ல என்றும், தமது அமைச்சர் மகிந்த சமரசிங்க மூலம் உலகத்துக்கு அறிவித்தார்.

பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் அன்று இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி கொடுத்த அறிக்கை பாம்பின் விசத்தை விட நச்சுத்தன்மை நிறைந்ததாகும். அதில் போரில் சிங்கள இராணுவம் வெற்றிமேல் வெற்றி பெறுவதாகவும் கிளிநொச்சி வீழ்ந்தது என்றும், ஆனையிறவு வீழ்ந்தது என்றும், முல்லைத்தீவு கைப்பற்றப்படும் என்றும், போரின் இறுதிக்கட்டம் விரைவில் நிறைவேறிவிடும் என்றும் அறிவித்தார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பு, ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் கடைசி மூச்சு அணையப் போகிறது என்று சொன்னதையே பிரணாப் முகர்ஜியும், இங்கே கூறினார்.

முல்லைத்தீவில் வெளியேறிச் செல்லும் தமிழர்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்வதாக ராஜபக்ச சொன்னதையே, பிரணாப் முகர்ஜியும் தன்னுடைய குற்றச்சாட்டாக அந்த அறிக்கையில் சொன்னார்.

எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால் முல்லைத்தீவில் 70 ஆயிரம் பேர் இருப்பதாகச் சொன்னதுதான். மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை நெருப்பு மண்டலக் குண்டு வீச்சில் கொன்றுவிட்டு கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகள் தான் என்று சிங்கள அரசு அறிவிக்கத் திட்டமிட்டு உள்ளது. அதனால்தான் 35 ஆயிரம் தமிழர்கள் வெளியேறிவிட்டார்கள் என்று ராஜபக்சவும், பிரணாப் முகர்ஜியும் சொன்னார்கள். அதனையே கலைஞர் கருணாநிதியும் அவர்களின் ஊதுகுழலாக மாறி 35 ஆயிரம் தமிழர்கள் வெளியேறி வந்ததாகவும் அவர்களில் காயம்பட்டவர்களுக்கு மருந்துகளும், மருத்துவர்களும் அனுப்பத் தயார் என்று அறிவித்தார்.

கழுத்தை அறுத்துவிட்டு கை காயத்துக்கு முதல் உதவி செய்யும் அயோக்கியத்தனம் தான் இந்த அறிவிப்பு ஆகும்.

மத்திய அரசு துரோகத்தின் உச்சகட்டமாக பெப்ரவரி மாதம் 28 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி ஒரு ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைச் சொன்னார். அதில் தமிழ் மக்களை முல்லைத்தீவில் இருந்து வெளியேற்றுவதற்கு விடுதலைப் புலிகள் முன்வந்திருப்பதாகவும், சிங்கள அரசு தமிழர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்றும் கூறினார். இது பச்சைப் பொய்யாகும்.

விடுதலைப் புலிகள், ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கும், இணைத் தலைமை நாடுகளுக்கும் அனுப்பிய அறிக்கையில், சிங்கள அரசு தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிறது என்றும், அந்த அரசின் அறிவிப்பை நம்பி, பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கி, 2,000 தமிழர்கள் கொல்லப்பட்டதையும், 3,000 பேர் காயம் அடைந்ததையும் சுட்டிக் காட்டியதோடு, உணவும், மருந்தும் இன்றி லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மரணத்தின் பிடியில் தவிப்பதாகவும், தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் விடியலுக்கு அனைத்துலக நாடுகளின் துணையோடு கூடிய உத்தரவாதம் கிடைக்கும் வரை தங்களின் ஆயுதப் போராட்டம் நிற்காது என்றும், உண்மை நிலையைக் கண்டறிய அனைத்துலக ஊடகவியலாளர்களும், மனித உரிமைக் காவலர்களும் தங்கு தடையின்றி முல்லைத்தீவில் நேரில் உண்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டு இறுதியில் போர் நிறுத்தம் செய்தது விடுதலைப் புலிகள்தான். அதன் பின்னர்தான் சிங்கள அரசு போர் நிறுத்தம் அறிவித்தது. அதனை முறித்ததும் சிங்கள அரசுதான்.

கடந்த நான்கு மாதத்துக்கு முன்பே விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தாங்கள் தயார் என்று அறிவித்ததை சிங்கள அரசு ஏற்கவே இல்லை. உண்மை இவ்வாறு இருக்க, பிரணாப் முகர்ஜி தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, தூத்துக்குடி வந்து போர் நிறுத்தம் பற்றி மோசடியான வார்த்தைகளை உதிர்த்துவிட்டுப் போனார். கலைஞர் கருணாநிதி அதற்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துவிட்டு, என் மீது வேறு எவரும் சொல்லத் துணியாத களங்கத்தைச் சுமத்த முற்பட்டு, புலிகள் பிரச்சினையை மாசாக்கி, மண்ணாக்கி, காசாக்கிவிட்டேன் என்றும், அரசியல் நாணயத்தை நாசப்படுத்தி விட்டேன் என்றும் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.

நான் கைது செய்யப்பட்ட மறுநாள் மார்ச் மாதம் 1 ஆம் நாள் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் பலித கோகன்ன, போர் நிறுத்தம் செய்யுமாறு எங்களை இந்த நிமிடம் வரை இந்திய அரசு கேட்கவில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.

பிரணாப் முகர்ஜியின் பொய்யும், பித்தலாட்டமும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. பிரணாப் முகர்ஜிக்கு பல்லாண்டு பாடி வரவேற்கும் முதல் மந்திரி இந்திய அரசின் அனைத்துத் துரோகத்துக்கும் கூட்டுப் பங்காளி என்பதால், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் நயவஞ்சகமான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.

துரோகி கருணாவும், கொலைகாரன் சரத் பொன்சேகாவும், புலிகளிடம் நானும், அண்ணன் நெடுமாறனும் பணம் பெறுகிறோம் என்று வீசிய கொடும்பழியைத்தான் கலைஞர் கருணாநிதியும் கூறுகிறார். அதனால்தான் அண்ணன் நெடுமாறன் குறித்து புலிகளிடம் பணம் பறிக்கும் இனத் துரோகி என்று மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதினார். இப்போது என்மீது களங்கச் சேற்றை வீசுகிறார். கலைஞர் கருணாநிதியின் முகத்திரையை வீரத்தியாகி முத்துக்குமார் கிழித்து எறிந்த பின்பு என்னை முதலமைச்சர் பழித்ததன் மூலம் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டிவிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் ஒருவரின் பெயரால் என்னைக் கீழ்த்தரமாக வசைபாடி அறிக்கை தந்ததை அப்போதே கழகக் கண்மணிகள் உணர்ந்துவிட்டனர். பாதுகாப்பு என்றும் சட்டம் என்றும் முதலமைச்சர் காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுகிறவன் அல்ல இந்த வைகோ என்றார் அவர்.



   

Sunday, March 1, 2009

ஈழ வரலாற்றை சுருக்கமாக தெரிந்து கொள்ளலாமே!


வணக்கம், ஈழ வரலாற்றை தெளிவாக அறிய முற்பட்டபோது. நான் படித்து அறிந்த செய்திகளை, இன்னும் பலருக்கு எளிய வடிவத்தில் தந்தால் பயனுள்ளதாக இருக்குமே என்று எண்ணி, இந்த பதிவை எழுதுகிறேன். என்னால் இயன்ற வரை சுருக்கியும், தெளிவான வரலாற்றுச் சான்றுகளை பதிவுசெய்தும் இருக்கிறேன். பக்க சார்பு இல்லாமல் இருக்க, இயன்ற வரை 'மூல' இணைப்புக்களையும் (சான்றாக) தந்துள்ளேன்.


ஓரளவு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பட்ட பிறகான காலத்திலிருந்து (பாதிரியார் பெர்னாவோ டி குவைறோஸ் 'perna de quiros' சிலோனின் மதமாற்றங்கள் பற்றி எழுதிய நூல்களினூடாக), சற்று சுருக்கமாக சிலோனின் வரலாற்றை பார்போம். சங்கிலியன் என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போர்த்துகல் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்க குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கிறிஸ்தவ மதத்துக்கு மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் தானே நேரில் சென்று வெட்டிக் கொன்றான், போத்துக்கேயர் அந்த இடத்தில் வேதசாட்சிகள் கோயில் என்ற தேவாலயத்தைக் கட்டினார்கள், அது இன்றும் மன்னாருக்கும், பேசாலைக்குமிடையிலுள்ள தோட்டவெளி என்னுமிடத்திலுண்டு. புனித சவேரியார் கிறிஸ்தவர்களைக் கொன்றதற்கு சங்கிலி குமாரனைப் பழிவாங்குமாறு லிஸ்பனுக்குக் கடிதம் எழுதியதால் தான், போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது, சிங்களக் கூலிப்படையின் உதவியுடன் போர் தொடுத்தார்கள்.யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து சங்கிலியனைத் தண்டிக்க வேண்டுமென்று இவர்கள் கோவாவில் இருந்த போத்துக்கேயர் தலைமையையும், போத்துக்கல் அரசனையும் பலவழிகளிலும் வற்புறுத்தி வந்தனர். 1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (Viceroy) இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா(Constantino de Braganca) என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான்.

சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லுரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். பின்னர் நீண்ட கால இடப்பெயர்வினால் வருந்திய போத்துகேய தலைமைக்கு தூது அனுப்பி, போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டு, நல்லூர் திரும்பினான். சங்கிலி மேலும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பின்னர் இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார்.



1591ல் ஆந்த்ரே போர்த்தாடொ(Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். எதிர்மன்னசிங்கம் போத்துக்கீசரின் உதவியுடன் ('கடுமையான போத்துக்கீச மேலாதிக்கத்தின் கீழ்') 25 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டான். 1616 ஆம் ஆண்டில் இவன் நோய்வாய்ப்பட்டு மரணமானான். பட்டத்துக்கு உரிமையுள்ளவனாக இருந்த இவனது மகன் சிறுவனாக இருந்தான். உரிய வயது வரும்வரை அவனையும், நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தனது மருமகனான அரசகேசரி அரசன் ஒப்படைத்திருந்தான். எனினும், அரசகேசரியைக் கொன்று இப்பொறுப்பைச் சங்கிலி குமாரன் எடுத்துக்கொண்டான். இறுதியாக பெரும் போர் புரிந்து, அப்போது ஆட்சியை கைப்பற்றி இருந்த சங்கிலி குமரனை வீழ்த்தி யாழ்ப்பாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இவர்கள் ஆட்சி காலத்தில் மக்கள் கடும் வரிகளாலும், பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் ஒரு குறுகிய காலகட்டத்தில், யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் (Dutch) 1658 ஜூன் 22 கைப்பற்றி, யாழ்ப்பாண கோட்டையை ஆக்கிரமித்தனர். இந்த வீழ்ச்சியின் போது நல்லூர் எனும் ஊரில் இருந்த பல கோயில்களையும் சரஸ்வதி மண்டபம் என்ற பெரிய நூலகத்தயும் போத்துக்கேயர்கள் அழித்தாக குறிப்புகள் உள்ளன.

இந்த போரின் முடிவில் 1660 ல் கண்டி இராச்சியம் தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் ஒல்லாந்தர்(Dutch) வசமானது. ஒல்லாந்தர் ஆட்சி 1658 தொடக்கம் 1796இல் யாழ்ப்பாணத்தை பிரித்தாணியரிடம் பறிகொடுக்கும் வரை நடைபெற்றுவந்தது. யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல்லாந்தர் வசம் இருந்தது. இவர்களும் மக்களை கடுமையான வரிகள் மூலம் தொலைத்து எடுத்தனர் என்கிறது வரலாறு...

அதன்பின்னர், 25 மார்ச் 1802 ம் ஆண்டு அமியேன் ஒப்பந்தம் (Treaty of Amiens) மூலம் ஒல்லாந்தர்(Dutch) வசமிருந்த தீவின் அனைத்து பகுதிகளும் ஆங்கிலேயர் வசமானது..


ஆங்கிலேய காலனி ஆதிக்கம், 1803 ம் ஆண்டு கண்டியை கைப்பற்ற சூழ்ச்சியுடன் கூடிய 'கண்டி யுத்தம்' நடத்தி அப்போது ஆண்டுகொண்டிருந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்(இயற்ப்பெயர் கண்ணுசாமி) என்ற இவன் தமிழ் நாட்டின் நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவான்(சிங்கள அரசனிடம் இருந்து - முன்னைய அரசன் ஸ்ரீ இரஜாதி ராஜ சிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது ஆட்சயுரிமை பெற்றான்!).

இந்த அரசனை கைப்பற்றி, 1815 மார்ச் 2 ஆம் திகதி 'கண்டி ஒப்பந்தம்' என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் முழுமையாக கொடுக்கப்பட்டது. அதாவது இந்தியாவில் இருந்ததைபோல் தமிழ் மற்றும் சிங்கள குறு மன்னர்களும் கப்பம் கட்டி தங்கள் பகுதிகளை நிர்வகிக்க அனுமதிக்கப்பட்டது.

இது மாதரியான வழக்கும் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் (Colebrooke Commission 1833) என்ற ஒப்பந்தத்தின் மூலம் சிதறிக் கிடந்த பல பகுதிகளை ஒருங்கினைத்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தினை செயல்படுத்தியதன் விளைவாக பிற்காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சினை உருவாக அடிக்கோலாக அமைந்தது!

19 ம் நூற்றாண்டு ஆரம்பாத்தில்
சிலோனின் செறிவான காபி மற்றும் தேயிலை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பெருமையாக விளங்கியது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ வர்க்கம், இந்த தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய நிறைய ஆட்கள் தேவைப்பட்டதால் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கூளித்தொழிலாளிகளை இறக்குமதி செய்ததது.

இதற்கிடையில், பத்தாம், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பாண்டிய சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்கு பிறகு, சிங்களர்கள் ஆட்சியின் போது, மத்திய தெற்கு இலங்கைக்கு தமிழகத்திலிருந்து, மேல் சாதி சமூகத்தினர், வியாபாரம், மதம் ஆகிய நோக்கங்கலுக்காக ஊடுருவியதாக தெரிகிறது. இவர்களை இலங்கையின் உயர்தட்டு சமூகம் தன்னுடன் காலபோக்கில் இணைத்துக்கொண்டது தெரிகிறது. இவ்வாறாக இலங்கைக்கு இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த மக்கள் தொகை 10% சதவிகிதமாக இருந்தது...

1920 களில் ஆறுமுக நாவலர் உள்ளிட்ட பல தமிழர் தலைவர்கள், தமிழர் உரிமைகளுக்காக போராடினர். குறிப்பாக தமிழ் மொழி போதனைகள், பள்ளிகளின் கட்டுமானம், போன்ற சமூக பணிகளாகும். இந்த கால கட்டத்தில் தான் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்தன.

இன்னும் வரும்...